சென்னை, அக்டோபர் 22:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அதனுடன் புயல் மழையும் இணைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், மழையால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் வகையில் அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி, மழை பாதிப்புகளுக்கான உடனடி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாநகராட்சி-நகராட்சி கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். மரம் சாய்ந்ததாக தகவல் வந்தால் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரை மிக துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தங்குமிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். உணவுகள் வழங்க வேண்டும். மின்னல் வேகத்தில் நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்க நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். வானிலை மைய எச்சரிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.