சென்னை, செப் 01:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வழிபாட்டுக்காக பிரதிஷ்டிக்கப்பட்டன. இந்த சிலைகள் கடந்து 5 நாட்கள் பூஜை நடைபெற்றதையடுத்து, நேற்று பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் ஊர்வலமாக கொண்டு வந்து கடலில் கரைக்கப்பட்டது.
மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சிலைகள் ஆட்டோக்கள், மினி லாரி, மற்றும் லாரிகளில் கொண்டு வந்து கடலில் கரைக்கப்பட்டன.
இதன் விளைவாக, பட்டினப்பாக்கம் கடற்கரை முழுவதும் கரையாத சிலை பாகங்கள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள், பூஜை செய்யப்பட்ட மாலைகள் உள்ளிட்ட டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. இந்தக் குப்பைகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
கடற்கரை பகுதியின் தூய்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசுத் துப்புரவு பணியாளர்கள், 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இரவு முழுவதும் லாரி லாரியாக குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இந்த அகற்றும் பணியில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.