திருவனந்தபுரம், ஜூலை 21:
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான வே.எஸ். அச்சுதானந்தன் (101 வயது) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் காலமானார். பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜூன் 23 முதல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையை பெற்று வந்தார்.
ஒரு மாதத்துக்கும் அதிகமாக வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாச அளிக்கப்பட்டு வந்தது, அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுதானந்தனின் உடல் அவரது சொந்த ஊரான ஆலப்புழா மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் உயிருடன் இருந்த கடைசி தலைவரான அச்சுதானந்தனும் தற்போது காலமாகியுள்ளார்.
தொழிற்சங்கவாதியாக தனது அரசியல் வாழ்கையைத் துவக்கியவருமே அச்சுதானந்தன். அவர் 2006-2011 ஆண்டு வரை கேரள முதல்வராக, 3 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். தனது 50 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் மாநில அரசியல், சமூக மாற்றத்திற்கு உரிய இலக்காக இவர் விளங்கினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயனின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரத்தை அச்சுதானந்தன் மேற்கொண்டார். ன்னர் வயது மூப்பு காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து விலகிய அச்சுதானந்தன் ஓய்வில் இருந்தார்.