சென்னை, ஆகஸ்ட் 12:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வின் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 8ம் தேதி வரை trb.tn.gov.in இணையதளத்தில் பெறப்படுகிறது. இதுவரை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வு, 2022 க்குப் பிறகு தற்போது மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.