குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

Entrance to Thiruvalluvar statue in Kumari is opened for the silver jubilee!

நாகர்கோவில், பிப்ரவரி 24:

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

முன்னதாக அவர் கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்துவைத்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் முதலமைச்சர் அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார்.

இன்று மாலை கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வழியில் புத்தளம் கல்லடி விளையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை மற்றும் ஸ்டாலின் படிப்பகத்தையும் முதல்வர் திறந்துவைக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் சிலையை திறந்துவைத்து பேசுகிறார்.

இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், நாளை (புதன்கிழமை) கன்கார்டியா பள்ளி திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!