வேலூர், ஆகஸ்ட் 18:
அதிமுக பிரசாரத்தில் திமுக அரசு ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் நேற்று இரவு 10.30 மணியளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, 108 ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் நுழைந்தது. அதில் நோயாளி இல்லாததை பார்த்த எடப்பாடி பழனிசாமி கடும் கோபமடைந்தார்.
பிறகு அவர் பேசியதாவது: “தி.மு.க. அரசு வேண்டுமென்றே என் கூட்டங்களுக்கு இடையூறு செய்ய, நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை அனுப்புகிறது. இது கேவலமான செயல். மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு? நான் பேசிய 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இதேபோன்று நடந்துள்ளது. அடுத்த முறை கூட்டத்தில் இப்படி ஆம்புலன்ஸ் வந்தால், அந்த ஓட்டுநரே அதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்,” என எச்சரிக்கை விடுத்தார்.