பாட்னா, அக்டோபர் 28:
இந்திய அரசியலில் புதிய வியூகங்களால் அடையாளம் பெற்றுள்ள பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது சுகாதார பிரிவில் பணியாற்றியவர். 2011ல் அரசியலுக்குள் வந்த அவர், 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் பிரதமர் தேர்தல் பிரசார வியூகம் வகுப்பதன் மூலம் தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றார்.
2022ல் “ஜன் சுராஜ்” என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, மக்கள் நேரடியாக பங்கேற்கும் “மாற்று அரசியல்” உருவாக்குவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளார். ஊழல் ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பீகார் அரசியலில் மூன்றாவது சக்தியாக உயர்ந்து வரும் அவர், “சாதி அரசியலுக்குப் பதில் வளர்ச்சி அரசியல்” என்ற கோஷத்துடன், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் 240 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பீகார் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தேர்தல் சட்டத்திற்கு விரோதம் எனக் கூறி, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று நாட்களுக்குள் எழுத்து மூலம் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பீகார் அரசியல் வட்டாரங்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.