சென்னை, டிச்மபர் 05:
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது அரசியலா? என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தைவிட்டு, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், மலை உச்சியில் உள்ள தீபத் தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக மதுரை போலீசார் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உடனடியாக தீபத் தூணில் தீபத்தை ஏற்றுமாறு நேற்று இரண்டாவது முறையாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் குவிந்த நிலையில், மதுரை காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்ததால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 2014 ஆம் ஆண்டு இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வழக்கமாக ஏற்றப்படும் பகுதியில் தீபம் ஏற்றியுள்ளதாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில்,
”மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்தான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.