சென்னை, ஜூலை 7:
சென்னை ஓட்டேரியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்: இரட்டைமலை சீனிவாசன் திராவிட அரசியலில் முன்னோடி, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரும், அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். ஓட்டேரி சாலைக்கு அவரது பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி.
தேர்தல் களப்பணிகள் விடுதலை சிறுத்தைகள் முதன்மையானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும்போது அதனை தீவிரப்படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.
திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பானது. அதில் உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.