டெல்லி, நவம்பர் 11:
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலயங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நெரிசல் அதிகமுள்ள டெல்லி நகரம் முழுவதும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லை மாவட்டங்களிலுள்ள காவல் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக நடைபெற்று வருகிறது.
கார் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள், நாடாளுமன்றம், இந்தியா கேட், ராஜகாட், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை, தில்லி சட்டப்பேரவை, மற்றும் பிரதமர், உள்துறை அமைச்சர், தில்லி முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் இல்லங்கள் சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு அமர்த்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். தில்லி காவல்துறைக்கு உதவியாக, அவர்கள் வெடிப்பு நிகழ்ந்த காரின் தொழில்நுட்ப தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து டெல்லியை இணைக்கும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத், ஹரியானாவின் ஃபரீதாபாத் பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வாகன தணிக்கை காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
மேலும் இச்சம்பவத்தை அடுத்து, தலைநகர் டெல்லி முழுவதும் பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு வலுவூட்டப்பட்டுள்ளது.