சென்னை, அக்டோபர் 27:
சென்னை வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் அமுதா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து, தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மையம் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
அவருடைய விளக்கப்படி, இந்த புயல் 17 கிலோமீட்டர் வேகத்தில் மோந்தா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது காக்கிநாடா அருகே, ஆந்திர கடலோர பகுதியில் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே நாளை (அக்டோபர் 28) காலை தீவிரமாக வலுப்பெற்று மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது காற்றின் வேகம் 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என எச்சரிக்கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக இருந்த வடகிழக்கு பருவமழை அளவு விட 57% அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக 144 மிமீ மழை பெய்யும் நிலையில், இந்த ஆண்டில் 227 மிமீ மழை ஏற்பட்டுள்ளது. இவருடைய தகவலின்படி, தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பருவமழை ஏற்பட்டுள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.