சென்னை, ஜூலை 9:
கடலூர் தனியார் பள்ளி வேன் நேற்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.
இதில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் (15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.விபத்து ஏற்பட்ட இடத்துக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கத் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து ரயில்வே காவல்துறையினர் விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மூடியதாகவும், பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதால் திறந்ததாக வெளியிடப்பட்டது. ஆனால், அதே அறிக்கையை திருத்தி இரண்டாவதாக வெளியிட்ட போது, கேட்டை மூடும்போது, வேன் ஓட்டுநர் மூட வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அறிக்கையிலேயே முன்னுக்குப்பின் முரணாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, காலை 7.10 மணிக்கு ரயில் வருவது தெரிந்து 7.06 மணிக்கு கேட்டை பூட்டியதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தத்தின் காரணமாக கேட் கீப்பர் மீண்டும் திறந்ததாகவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், வேன் வந்தபோது ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று வேன் ஓட்டுநர், காயமடைந்து சிகிச்சையில் உள்ள மாணவன் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்தனர்.இதில், யார் சொல்வது உண்மை என்பது ஒருபுறம் இருக்க, ரயில் வருவதை அறிந்தும் கேட்டை திறந்து வைத்திருந்தது / திறந்தது கேட் கீப்பரின் குற்றம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து விபத்து நடந்த செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் திருத்தணி பகுதியைச் சார்ந்த புதிய கேட் கீப்பர் ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.