சென்னை ,ஜூலை 10:
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதன்படி, 2021 டிசம்பரில் நீதிமன்றம் ராயபுரம் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், சென்னையின் பிற மண்டலங்களிலும் சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி ஆணையர் அமல்படுத்தாததால், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கருதி வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த மனுவை தலைமை நீதிபதிகள் கே.ஆா் ஸ்ரீராம் – சுந்தா்மோகன் அமா்வு விசாரித்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்ததாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம்செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார். அப்போது, அபராதம் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது தரப்பில் தான் தவறு இருப்பதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை படித்துப் பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டுமெனவும், அப்படி செய்யவில்லை என்றால் அவர் ஆணையராக இருக்கவே தகுதியில்லாதவர் எனவும் கூறினார். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் நேற்று ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, உரிய பிரமாணப் பத்திரத்துடன் நாளை ஆஜராக வேண்டுமென ஆணையருக்கு உத்தரவிட்டார்.