சென்னை, டிசம்பர் 03:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு இன்று சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி கட்சிகள், தேர்தல் பணிகள், பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக, தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் என 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
இந்த குழு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. காங்கிரஸ் தலைமை அமைத்த 5 பேர் கொண்ட எங்கள் குழு இன்று மரியாதை நிமித்தமாக முதமைச்சரைச் சந்தித்தோம். திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்ட பிறகு எங்களுடைய பேச்சுவார்த்தை தொடங்கும்” என்று கூறினார்.
கடந்த தேர்தலில் வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.