சென்னை, ஆகஸ்ட் 13:
ராமர் குறித்து அவதூறாக பேசியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைரமுத்து மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, கம்ப ராமாயணத்தை மேற்கோள்காட்டி ராமர் குறித்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது . வைரமுத்து பேசியதாவது , “சீதையை பிரிந்து விட்ட ராமர் புத்தி சுவாதீனம் இழந்தவன்” என்றும், “புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றச்சாட்டுக்குட்பட்டால் தண்டனை விதிக்கப்படவில்லை” என்ற இந்திய தண்டனை சட்டத்தின் 84ஆம் பிரிவை மேற்கொண்டு ராமரை குற்றவாளியாய் விளக்கியது விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பேச்சு பொது மக்களிடையே மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்காரர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவிஞர் வைரமுத்து மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது புகார் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தமிழக பாஜகவினர் மற்றும் பல்வேறு சமூகவியல் அமைப்புகளும் வைரமுத்துவின் கருத்துக்களை கடுமையாக கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், இலங்கை ஆன்மீக பேச்சாளர் ஜெயராஜ், இந்தப் பேச்சுக்கு எதிராகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி, கம்பன் போன்ற பெரும் கவிஞரை இவ்வாறு மதிக்காமை சரியாக இல்லை என்றும், இந்த கருத்துக்கள் வன்முறையை ஊக்குவிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விட்டுள்ளார்.