சென்னை, அக்டோபர் 21:
1959 அக்டோபர் 21-ஆம் தேதி லடாக் மாநிலத்தின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வீர காவலர்களின் தியாகத்தையும், கடமையில் உயிர்நீத்த அனைத்து காவல் அதிகாரிகளின் பணிவீரத்தையும் நினைவு கூரும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் காவலர் நினைவு சின்னத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவாக ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்தார். தொடர்ந்து, காவல்துறையில் கருணை அடிப்படையில் புதியதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.