சென்னை, அக்டோபர் 15:
சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
முதல்வர் கூறியதாவது, “கரூர் மாவட்டத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம், நம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோருக்கு நான் ஆழ்ந்த அஞ்சலியையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
கரூர்-வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சனை தொடர்பாக, தவெக கட்சி அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை உண்டாகும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்கப்படவில்லை என முதல்வர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் சிபிஐ மூலம் நடைபெற்று வருகிறது. அரசாங்கம் மற்றும் காவல் துறை இரண்டும் சம்பவம் தொடர்பான நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.