சென்னை, ஜூலை 8:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பகுதிநேர ஆசிரியர்கள் மீது எந்த விதமான வழக்குகளும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது, காவல்துறை அவர்களை கைது செய்தது குறித்து ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணி நிரந்தரமாக்கப்படுவதும், ஊதியம் உயர்த்தப்படுவதும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.இதற்கு முன்பும் தமிழக அரசு வாய்மொழி உத்தரவாதங்களை வழங்கி, போராட்டங்களை தணித்துவிட்டதாகவும், ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரமாக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை எனவும் ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எதிராக எந்தவிதமான வழக்குகளும் பதிவு செய்யாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.