சென்னை, பிபர்வரி 10:
நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையில், படத்திற்கு மீண்டும் சென்சார் சான்றிதழ் பெறும் நோக்கில், ரிவைசிங் கமிட்டிக்கு படம் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக பதிவுத்துறைக்கு படக்குழு கடிதம் அளித்திருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (10.02.26) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், வழக்கை திரும்ப பெற கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.