சென்னை, ஜூலை 8:
மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத்தப்படவுள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.சு., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்ந்த 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது, பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதி செய்தார். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறை முழுமையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.