டெல்லி, நவம்பர் 05:
மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் முன் ஆவணங்களுடன் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினார். ஹரியாணா மாநிலத்தில் 25 லட்சம் போலி வாக்குகளின் உதவியால் பாஜக ஆட்சியைப் பறித்திருக்கிறது என அவர் கூறினார்.
“தேர்தல் ஆணையத்தின் ஆதரவோடு மத்திய அரசு ஜனநாயகத்தை அழிக்கும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது. ஹரியாணாவில் மட்டும் 25 லட்சம் போலி வாக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார் ராகுல்.
ராகுல் காந்தி மேலும் தெரிவித்ததாவது: “ஒரு பிரேசில் பெண் மாடலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி வாக்காளர் அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே புகைப்படத்தின் அடிப்படையில் ஒரு தொகுதியில் 100 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே நபர் ஒரே நாளில் பல முறை வாக்களிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது என்பது பெரும் கேள்வி,” என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி, தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கைக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் இருப்பதாகவும், இதை தேர்தல் ஆணையம் விளக்க முடியாது எனக் கூறினார்.
“ஒரே புகைப்படத்தை வைத்து 223 போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோசடிகளால், ஹரியாணாவில் எட்டு பேரில் ஒருவர் போலியான வாக்காளராக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டே ஜனநாயகத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.”

ஜென்-ஸி என அழைக்கப்படும் இளம் வாக்காளர்களின் எதிர்காலமே இதனால் ஆபத்துக்குள்ளாகிவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“எனது குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீத ஆதாரங்கள் உள்ளன. 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.