சென்னை, செப்டம்பர் 16:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிமுதல் தொடக்கம் என தெற்கு ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக பயணிகள் தமக்கு தேவைப்படும் ரயில்களை முன்பதிவு செய்யலாம்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவில் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை, அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில், தாம்பரம் முதல் நாகர்கோவில் செல்லும் ரயில்கள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 27 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படுகின்றன.
சென்னை – போத்தனூர் இடையேயான சிறப்பு ரயில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில், போத்தனூரிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவில் முதல் சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும், எதிர் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே அக்டோபர் 1 முதல் 29 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தூத்துக்குடி- எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 23 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும் இயங்க உள்ளது.
மேலும், நெல்லை – எழும்பூர், எழும்பூர் – நெல்லை இடையேயான பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 16 இலிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 312 கூடுதல் பயணிகள் பயணிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குவதால், பயணிகள் தமது ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.