திருச்சி, ஆகஸ்ட் 02:
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை, அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில், “திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்குள் வெடிக்கும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நிபுணர்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் முழுமையான சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றிய அனைத்து பகுதியும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.