பீகார், நவம்பர் 14:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்கிறதா, அல்லது எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வருகிறதா என்ற எதிர்பார்ப்பில் மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 46 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8.30 மணிக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
மொத்தம் 243 தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண 243 தேர்தல் அதிகாரிகள், 243 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மேசையிலும் ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் உடன் 4,372 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர்.
இந்த தேர்தல், வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தத்துக்குப் பிறகு நடைபெற்றது என்பதால் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
7.45 கோடி வாக்காளர்களைக் கொண்ட மாநிலத்தில், இதுவரை இல்லாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெண்கள் 71.6% என ஆண்களை (62.8%) விட அதிக சதவீதத்தில் வாக்களித்திருப்பது சிறப்பம்சமாகும்.