புதுடெல்லி, நவம்பர் 29:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான தலைவர் பதவி மோதலில், இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அன்புமணி ராமதாஸ் தான் கட்சித் தலைவரென்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், பாமக நிர்வாகிகளின் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் 1 வரை செல்லுபடியாக உள்ளதாகவும், அன்புமணி ராமதாஸ் தற்போது தலைவராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் , உட்கட்சி மோதலை கட்சி அமைப்பு அல்லது நீதிமன்றத்தில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த முடிவு ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் கமிஷனில் முறையிட்டனர்.
பின்னர் அது குறித்து ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அன்புமணி ராமதாஸ் போலி ஆவணம் மூலம் தேர்தல் கமிஷனை நம்ப வைத்துள்ளார். அதன்பேரில் தேர்தல் கமிஷன் மோசடி செய்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களது கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதை கட்சியை திருடும் நடவடிக்கையாக பார்க்கிறோம்.
தேர்தல் கமிஷன் ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டும். எங்களை கோர்ட்டுக்கு போக சொல்லியிருப்பது கண்டனத்துக்கு உரியது. தேர்தல் கமிஷனின் இந்த செயலை கண்டித்து சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து தேர்தல் கமிஷன் முன் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.