சென்னை, அக்டோபர் 21 :
தீபாவளி திருநாளைத் தொடர்ந்து, சென்னையில் காற்றின் தரம் கணிசமாகக் குறைந்து மாசு அளவு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் தாக்கத்தை மதிப்பீடு செய்ய, சுற்றுப்புற காற்று தரத்தையும் ஒலி மாசு அளவையும் அந்த வாரியம் ஆய்வு செய்தது. அதன் படி, சென்னையில் பல பகுதிகளில் காற்று தரக்குறியீடு (AQI) தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் தரவரிசைப்படி, 0–50 வரை நல்லது, 51–100 திருப்திகரமானது, 101–200 மிதமானது, 201–300 மோசமானது, 301–400 மிகவும் மோசமானது, 401–500 கடுமையானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அளவீட்டின் அடிப்படையில், தீபாவளி தினத்துக்குப் பிறகு சென்னையின் சராசரி காற்று தரக் குறியீடு 154 ஆகப் பதிவாகியுள்ளது, இது மிதமான மாசு நிலை என்ற பிரிவில் வருகிறது.
அதே நேரத்தில், நகரின் பல பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பெருங்குடியில் 229 புள்ளிகள் பதிவாகி மோசமான பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர்கள், தீபாவளிக்குப் பிறகு சில நாட்கள் வரை காற்று மாசு நிலை உயர்ந்தே காணப்படும் என்றும், இதனால் மூச்சுக்குழாய் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.