சென்னை, அக்டோபர் 15:
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் கூட்டத்தொடரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) உறுப்பினர்கள் இடது கையில் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது கரூர் கூட்ட நெரிசல் பலி மற்றும் கிட்னி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிரான எதிர்ப்பாக நடந்தது.
பேரவை கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுந்து பேசி கொண்டிருந்தார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர் மு.அப்பாவு, “அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளீர்கள். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ரத்த அழுத்தமா?” என்று கிண்டல் செய்யும் வகையில் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “சிறைகளிலே சிறைவாசிகளுக்கு கையில் கட்ட அடையாளம் கொடுப்பார்கள். அதுபோல தனி அடையாளத்துடன் வந்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன்” என்று கூறி, அவரும் கிண்டல் செய்தார். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.