சென்னை, டிசம்பர் 23:
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு இன்று வருகைதந்த விஜய்யின் காரை தவெகவினர் மறித்து போராட்டம் நடத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களின் பெயர்கள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர் பதவி அறிவிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது பெயர் மாவட்டச் செயலாளர் பட்டியலில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியில் இருந்துள்ளார்.
சென்னை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் வாயிலில் இன்று காலைமுதல் தனது ஆதரவாளர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் அஜிதா ஈடுபட்டிருந்தார். இன்று பகல் 1 மணியளவில் தவெக அலுவலகத்துக்கு வருகைதந்த கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் போராட்டக்காரர்களை விலக்கிய நிலையில், விஜய் காரை நிறுத்தாமல் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, அஜிதாவிடம் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.