சென்னை, ஜூலை 11:
தமிழக அரசு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் வேளாண் நிலங்களுக்கு பாசனம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கி நிதியுதவியுடன் 2018-ம் ஆண்டு தொடங்கிய பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், 47 துணை வடிநிலைகளில் 4.69 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2,962 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த திட்டத்திற்கு, தற்போது ரூ.305 கோடி கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்ட காலத்தை 2025 டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்து, ரூ.3,267.85 கோடி திருத்திய மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாசன விவசாய உற்பத்தித்திறன், காலநிலை மாற்றத்துக்கு எதிரான சக்தி மற்றும் நீர் மேலாண்மை மேம்படும்.
இத்திட்டத்தை நீர்வளத்துறை தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத்துறை, மீன்வளம்-மீனவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 6 துறைகள் மற்றும் தமிழ்நாடு கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்துகின்றன.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நீர் வசதி மேம்பட்டு, விவசாய உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் குறைக்கும் வகையில் நீர் மேலாண்மை முறைகள் மேம்படுத்தப்படுகின்றன.