டெல்லி, செப்டம்பர் 06.:
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் முன்னிட்டு கட்சிகள் தீவிரமாக கூட்டணி அமைக்கும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தி.மு.க. சார்பாக, ஓரணியில் தமிழகம் என்ற முழக்கத்துடன் மக்களை நேரிடையாக சந்தித்து, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. சார்பாக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் முன்னிலை, கள நிலவரம், அரசியல் பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணி ஒருங்கிணைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக மாநில நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நேரில் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், கட்சியின் முன்னிலை மற்றும் தேர்தல் கள நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை செய்தார்.
இந்நிலையில், அமித்ஷாவை தனது ஆதரவாளருடன் சந்தித்த சரத்குமார், 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகின்றது.