சென்னை, அக்டோபர் 21:
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகரித்துவரும் நிலையில், அது புயலாக மாறுமா என்பதை பற்றி உறுதியான தகவல் நாளை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இந்நிலை குறித்து இன்று அக். 21 செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மையப்பகுதியில் உருவாகி இருப்பதாகவும், எதிர்வரும் 24 மணி நேரத்தில் அதன் திசை மற்றும் வேகம் அடிப்படையில் அது புயலாக மாறுமா என்பதை கணிக்க முடியும் எனவும் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது.
தெற்கு அந்தமான் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னையில் மிக கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை தமிழகத்தில் இயல்பை விட 59% மழை பெய்துள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அக். 1 முதல் அக். 21 வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.