சென்னை, ஜனவரி 22:
மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.
அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி – பியூஷ் கோயல் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டம் எங்கள் கூட்டணி வெற்றிக்கு அச்சாணியாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
வலிமையான கூட்டணியாகத் திகழும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும்.
தமிழக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பியூஷ் கோயல், தமிழகத்தில், ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றார்.
மத்தியில், பிரதமர் மோடி மற்றும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலினால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும், வரும் தேர்தலில் திமுக நிச்சயம் தோல்வியடையும் என்றார்.