புதுச்சேரி, டிசம்பர் 09:
புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி, புதுவை அரசு மேற்கொண்ட வளர்ச்சியையும் செயல்திறனையும் வெளிப்படையாக பாராட்டினார்.
பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். மத்திய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுவை ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்குதான் தமிழ்நாடு தனி, புதுவை தனி. ஆனால், நாம் வேறுவேறு கிடையாது. நாம் அனைவரும் சொந்தம்தான்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுவை மட்டுமல்ல உலகில் எங்கிருந்தாலும் நம் வகையறா எல்லாம் நமது உறவுதான். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண்.
1977 இல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 1974 இல் புதுவையில் அவரது ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் அவரை மிஸ் செய்யாதீங்கனு எச்சரித்ததே புதுவைதான். தமிழகம் மாதிரியே புதுவை மக்களே என்னை 30 வருடமா என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீகள்.
விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது எனது கடுமை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது. வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்வு என்றாலும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். புதுவை அரசுக்கும், புதுவை முதல்வர் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள்.” எனத் தெரிவித்தார்.