காஞ்சிபுரம், டிசம்பர் 08:
வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புராணம் சார்ந்த சிறப்புகளைக் கொண்ட ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு சொந்தமானதாக மதிக்கப்படும் இக்கோயிலில், ரூ.29 கோடி மதிப்புள்ள திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 28.6.2023 அன்று பாலாலயம் நடந்தது. மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 8 திங்கள்கிழமை நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அறிவித்தது.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் சிவகங்கை தீர்த்தக்குளம் அருகே 170 சிவாச்சாரியர்கள் மற்றும் 170 வேத விற்பன்னர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பிரம்மாண்ட நவகுண்ட யாகசாலை மண்டபத்தில் பூஜைகள் நடத்தினர். இப்பூஜைகள் இந்த மாதம் 4-ம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் துவங்கியிருந்தது.
இதனைத்தொடர்ந்து டிசம்பர் 5, 6, 7 ஆகிய நாட்களில் விசேஷ சந்தி யாகபூஜைகளும் நடைபெற்றது, பூஜைகள் கோயிலின் ஸ்தானீகர்கள் மற்றும் ஸ்தலத்தார்கள் முன்னிலையில் நடைபாய்ந்தது.
இதில் 30-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் பக்க இசைக்கலைஞர்களுடன் திருமுறைப்பாராயணமும் பாடினார்கள்.
டிசம்பர் 8 திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரங்களுக்கு பல்வேறு வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு காலை 6.10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது மூலவர் கோபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பிறகு மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமியார் தலைமையில் விழாக்குழு மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆன்மீக சொற்பொழிவாளரான தேச மங்கையர்கரசி கும்பாபிஷேகத்தை நேர்முகமாக வர்ணனை செய்தார்.
விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக, ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மோகனாம்பாள், தொழிலாளர் நீதிபதி சுஜாதா, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர்கள் மணிகண்டன், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
