சென்னை, நவம்பர் 25:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு INTUC தலைவர் வி.ஆர். ஜெகந்நாதன் புதிய தொழிலாளர் சட்டம் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, “இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் அனுமதி எனக்கே (வி.ஆர். ஜெகந்நாதன்) வழங்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் INTUC சார்பில் மாநாடு நடத்த அனுமதி இல்லை. இதை மீறி மாநாடு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், கடந்த நவம்பர் 15 அன்று மதுரையில் தமிழ்நாடு INTUC பிரதிநிதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அகில இந்திய INTUC தேசிய தலைவர் டாக்டர் ஜி. சஞ்சீவ ரெட்டி அவர்களின் மேற்பார்வையில், தேசிய துணைத் தலைவர் ஜி. சத்தியஜீத் ரெட்டி மற்றும் செயலாளர் ஆர்.டி. சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில், அனைத்து பிரதிநிதிகளின் ஒருமனப்பான்மையுடன் வி.ஆர். ஜெகந்நாதன் தமிழ்நாடு INTUC தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அவர் அறிவித்தார். அதன்படி, பொதுச் செயலாளராக டாக்டர் பி. சீனிவாசன், செயல் தலைவராக ஆதிகேசவன், மூத்த துணைத் தலைவராக ஆர். சீனிவாசன், பொதுச் செயலாளர்களாக கே. கே. களஞ்சியம், கே. இளவரி, டி. வி. சேவியர், துணைத் தலைவராக என். அருள் பிரசாத், பொருளாளராக பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.