சென்னை,நவம்பர் 10:
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ள தேசிய விருதுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி அரியானாவின் குருகிராம் பகுதியில் நடந்தது. இதில் நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருக்கிறது. இதற்கான விருதை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இந்த நிலையில், தேசிய விருதை பெற்ற சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இணைய தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
A city’s living standards are reflected in the reliability and quality of its public transport. இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்துகழகத்துக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள். நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் சென்னை மாநகர போக்குவரத்துகழகம், பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.