ஈரோடு, நவம்பர் 07:
அதிமுகவில் ஒருங்கிணைப்பை முன்னெடுக்கப் பேசுவதற்காக தன்னை பாஜக அழைத்ததாக அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
“என்னை அழைத்தது பாஜகதான். அங்கே என்ன விவாதங்கள் நடந்தது என்பதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர்கள் கூறினர். நானும் அதையே ஒத்துக் கொண்டேன்.
பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை; எங்களை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழி இல்லை என்றே நான் தெரிவித்தேன். ஆகவே எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க பாஜக தயாராக இருக்க வேண்டும் என சொன்னேன். அதிமுகவை உடைக்க என்னை வைத்து பாஜக ஒருபோதும் முயன்றதில்லை,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,“ஒருங்கிணைப்பை பற்றி பேசும்போது எடப்பாடி பழனிசாமி என்ன கூறினார் என்பது எனக்குத் தான் தெரியும். குடும்பத்தில் சண்டைகள் நடந்தாலும் பின்னர் ஒன்று சேர்வது இயல்புதான். நாங்கள் போன்றவர்கள் முன்மொழியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி இன்று முதலமைச்சர் பதவியை அடைந்திருக்க முடியாது.
தன்னை முதலமைச்சராக ஆக்கிய சசிகலாவைப் பற்றி எடப்பாடி பழனிசாமி மிகுந்த அவதூறாகப் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் அவரின் பின்னால் அமர்ந்திருந்தேன், ஆனாலும் ஒருமுறை கூட ‘உங்களுக்கு என்ன குறை?’ என்று கேட்கவில்லை,” என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.