சென்னை, நவம்பர் 06:
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது.
நேற்று வானிலை மையம் வெளியிட்ட தகவல் படி, தமிழக உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 6 முதல் 11 வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி இன்று வியாழக்கிழமை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் நாளையும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்துக்குள் ஆலந்தூர், விமான நிலையம், மீனம்பாக்கம், ஆவடி பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவாகியது.