சென்னை, நவம்பர் 05:
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தவெக தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில், கரூரில் நடந்த பிரசார நிகழ்வில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க சில பின்வருமாறு:
- கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தின் போது தமிழக அரசு திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் மிகப்பெரிய குளறுபடிகள் நிகழச் செய்துள்ளதாகக் கட்சித் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறும் திமுக அரசை கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வாக்காளர் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறைகளை நிறுத்தி, பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
- தவெக பிரசாரக் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளுக்காக வரும் பொதுமக்களுக்கு பாகுபாடின்றி பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
- மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, மழை வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டணித் தீர்மானங்கள் தொடர்பாக, அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியைப் பற்றி முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக தனது தேர்தல் வியூகங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தவெக வரும் தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிடும் எண்ணத்தையும் இந்தக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் சூழல் புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது.