கோயம்புத்தூர், நவம்பர் 03:
கோயம்புத்தூர் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த 19 வயதான மாணவி ஒருவர் கோவை நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றார்.
இருவரும் இரவு 11 மணியளவில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுப்பாட்டில் இருந்த மூன்று நபர்கள் அங்கு வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்து, சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் காரை அணுகி இருவரையும் வெளியே வருமாறு மிரட்டியதும், மாணவி மற்றும் அவரது நண்பர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் குற்றவாளிகள் காரை தடுத்து கண்ணாடியை உடைத்தனர். அதனைத் தொடர்ந்து அவ்விடம் இருந்த ஆண் நண்பரின் தலையில் அரிவாளால் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த காயத்தால் அவர் மயங்கி விழுந்தார்.
அந்த நிலையிலே, கத்தி முனையில் மாணவியை கடத்திச் சென்ற மூவரும், ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வைத்து வன்கொடுமை செய்துள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், மாணவியை காணாமல் போனதை கவனித்து உடனே 100-க்கு அழைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
பீளமேடு போலீஸார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். புதர் மண்டிய இடத்தில், மாணவி உடல் மற்றும் மன ரீதியாக சிதைந்த நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் அதிகாலை 4 மணிவரை உதவிக்கு அழைக்க முடியாமல் அங்கேயே பரிதவித்திருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவியை போலீஸார் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் வசிப்பதற்கு தூரமாகவும், சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமாகவும் இருப்பதால், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கேமரா பதிவுகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் கோவை நகரம் முழுவதும் அதிர்ச்சியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளையும் கிளப்பியுள்ளது. பல்வேறு சமூக, மாணவர், அரசியல் அமைப்புகள் இந்தக் கொடூரச் செயலை கண்டித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.