சென்னை, அக்டோபர் 31:
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும் வகையில், அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மீண்டும் சென்னையில் உற்பத்தி நிலையத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட தொழில் முதலீட்டு சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன்போது அவர், சென்னை அருகே மறைமலைநகர் பகுதியில் முன்பு மூடப்பட்டிருந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்துமாறு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.
அந்த விவாதத்திற்குப் பிறகு ஃபோர்டு நிர்வாகம், சென்னையில் உற்பத்தியை மீண்டும் தொடங்க அரசுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டது. அதன் அடிப்படையில், நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழக தொழில் துறை அதிகாரிகள் மற்றும் ஃபோர்டு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்! என்று வாழ்த்தியுள்ளார்.