சென்னை, அக்டோபர் 25:
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தை முன்னிட்டு அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் தூர்வார பணி போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்து வழங்கிய உத்தரவுகளின் பேரில், இன்று கூடுதல் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு மண் திட்டுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வார பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அச்சமயம் 150 மீட்டர் அளவிற்கு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதலமைச்சரின் உத்தரவுகளின் பேரில், கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்ட தகவலின்படி, முகத்துவாரத்தில் கூடுதல் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 2025 முதல் நீர்வள துறையினரால் தூர்வார பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலையிலிருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 JCB இயந்திரங்களும் போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையின் மேற்பார்வையில் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன்பு 3 பொக்லைன்களுடன் சாதாரண முறையில் நடைபெற்ற பணி இன்று போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் முக்கிய ஆற்றுப் படுகைகளில் ஒன்றான அடையாறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி 42.38 கிலோமீட்டர் தூரம் பயணித்து பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கடல் அலைகளின் தொடர் தாக்கத்தால் முகத்துவாரத்தில் மண் படுகைகள் சேர்ந்து நீர் வடிவு தடைபடுவது இயற்கையான நிகழ்வு.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 945 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்ததால் முகத்துவாரத்தில் தேங்கும் நீர் வெள்ளபெருக்கை ஏற்படுத்தாமல் இருக்க தூர்வார பணி அவசியமாகியுள்ளது.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் அறிவுறுத்தியதாவது, மாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் கூடிய குழுவினை அமைத்து, வடகிழக்குப் பருவமழை காலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணியால் சென்னை நகரின் வெள்ள பாதிப்பு கணிசமாக குறையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.