திருச்சி, அக்டோபர் 23:
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தனது அரசியல் தளத்தை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்தக் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 என்ற தலைப்பில் பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் பெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு குறித்து சீமான் தன் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாக வேண்டுமானால், மக்களே முன்வர வேண்டும். அந்த மாற்றத்தை ஆரம்பிப்பதற்கான வரலாற்று மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சி முன்னதாக ஆடு–மாடு மாநாடு, மர மாநாடு, மலை மாநாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த அணிவகுப்பின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 7 அன்று நடத்தப் போகும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026” நிகழ்வில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாடு, வரும் ஆண்டுக்கான தேர்தல் பிரசாரத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, மாநிலம் முழுவதும் நடைபெறும் மாவட்ட மாநாடுகளை ஒருங்கிணைத்து மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தி வருகிறது.