சென்னை, அக்டோபர் 22:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருவதையடுத்து, பல பகுதிகளில் பரவலாக மழை தொடர்கிறது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அது தாழ்வு பகுதி நிலையிலேயே இருந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலவரத்தில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நாளை சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கலப்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சியில் வரும் 26, 27, 28ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் வரும் 26, 27, 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.