சென்னை, அக்டோபர் 21:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 800 கனஅடி அளவில் நீர்வரத்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீரை முதல்கட்டமாக வெளியேற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏரியின் நீர்மட்டம் 21அடி என உயர்ந்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கீழ்நிலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் நிறுவன மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் கால்வாய் வழியாக நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படும் நிலையில், தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்போருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.