தமிழகம், அக்டோபர் 11:
தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஃபைப்ரெட் கார்ப்பரேஷன் இணைப்பில், 10,000 ஊராட்சிகளில் நேரடி காணொலி ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சிறப்புரை வழங்கி, கிராம பொதுமக்களுடன் நேரடியாக உரையாடினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம், கோயம்புத்தூர் வாரப்பட்டி, விழுப்புரம் கொண்டாங்கி மற்றும் தஞ்சாவூர் திருமலை சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளின் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொள்வர்.
கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தேர்ந்தெடுக்கும் முக்கிய மூன்று அத்தியாவசிய தேவைகள் ஒப்புதல் பெறுவதுடன், சாதிப் பெயர்கள் கொண்ட இடங்களின் பெயர்களை நீக்கி பொருத்தமான புதிய பெயர்களை வழங்குவதை பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
மேலும், ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் நலிவு நிலை குறைப்புத் திட்டம் தயாரித்து அதன் ஒப்புதலை பெறுதல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் நிதி செலவினம் குறித்த விவாதங்கள் நடைபெறும்.
2024-25 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஒப்புதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான வரவு-பரிவர்த்தனைகள், தூய்மை பாரத் இயக்க நிலை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், டெங்கு தடுக்க நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்றவை விவாதிக்கப்பட உள்ளன.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 7,515 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களின் காணொலி-ஆடியோ பதிவுகள் சபாசார் இணையதளத்தில் பதிவேற்றப்படும். பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தின் கீழ் கிராம வளர்ச்சி திட்டம் உருவாக்கி அதன் ஒப்புதல் பெறும் பணிகள் சரியான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.