கரூர், செப்டம்பர் 30:
கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணைகளின் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர்.
கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டிருந்த போதும், தொகுதி செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் என்று தெரியப்படுத்தியிருந்தது; ஆனால் பிரசார கூட்டத்தில் 25,000 க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
இந்த நிலையில் தாமதமாக வந்த விஜய், அனுமதியின்றி பல இடங்களில் ரோடுஷோ நடத்தி, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், காவல்துறை பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சரியாக கட்டுப்படுத்தாததால், கூட்ட நெரிசல் அதிகரித்து அசாதாரண சூழல் உருவானது.
அதில் ஏற்படக் கூடிய மூச்சுத்திணறல் மற்றும் காயங்கள் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதே நிலையில், நிகழ்ச்சி நடைபெறக்கூடிய பகுதியில் தனியார் மருத்துவமனை பெயர் பலகையில் ஏற்பட்ட சேதத்தையும் பொது மக்கள் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதியழகன், பவுன்ராஜ் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி, கடந்த இரவு மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் அருகே கைது செய்தனர். பின்னர், அவருக்கு அடைக்கலம் கொடுத்த மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக்க வைத்து, அக்டோபர் 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றக் காவல் முடிந்த பின் இருவரையும் திருச்சி சிறையில் அடைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.