கரூர், செப்டம்பர் 30:
கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாவட்ட செயலர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் இன்று காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை இரவு மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் அருகே கைது செய்தனர். பின்னர், அவருக்கு அடைக்கலம் கொடுத்த மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து மதியழகனை 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை இருவரும் கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இருவரது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.