சென்னை, ஆகஸ்ட் 13:
சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6-ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த 13 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (என்யூஎல்எம்) சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தற்காலிக பந்தல்கள் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் மக்களின் அன்றாடப் பணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடும் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டது.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.