புதுக்கோட்டை, ஜூலை 25:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தயாராகி கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் தீவிரமாக மாறியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பேரணி தற்போது மாநிலம் முழுவதும் அதிரடியாக முன்னோக்கியிருக்கிறது.
ஈபிஎஸ் தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நிறைவு செய்த நிலையில், இரண்டாம் சுற்றுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். அந்த இடங்களில் பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
ஆனால், கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த கூட்டத்தில், சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர் கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.